தமிழகம் முழுவதும் 2வது நாளாக நேற்று நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமி 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒரே நாளில் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதையும் தாண்டி கூடுதலாக 8 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நேற்றும் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனால் மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 16.43 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகச் சென்னையில் 2,01,805 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாகக் கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 36 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 4793 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்த பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் இரண்டாவது கட்டமாகத் தடுப்பூசி முகாமுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4.35 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தியுள்ளது. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்றுடன் (நேற்று செப்டம்பர் 19) தீர்ந்து விடும் என்பதால் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,