இன்று சித்திரை திருநாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் அருகே அதிமுக சார்பாக தமிழன்னைக்கு அபிஷேகம் நடத்தி பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக மக்களவை தொகுதி வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “தமிழ் வளர்ச்சிக்காக திமுக எதுவுமே செய்யவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல தமிழன்னையின் சிலை உலகத் தமிழ் சங்கக் கட்டடத்தில் நிறுவப்படும்” என்று கூறினார். 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்களை அறிவித்தது தொடர்பான கேள்விக்கு அவர், “தொடங்குவது முக்கியமல்ல, முடிப்பதுதான் முக்கியம். முதல் சுற்றில் முதலில் வருபவர்கள் யார் என்பது முக்கியமல்ல. இறுதி சுற்றில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதே முக்கியம்.
4 சட்டமன்றத் தொகுதிகளும் அதிமுகவின் கோட்டை. நிச்சயமாக நான்கு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்” என்று கூறினார். பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக சுயேச்சை வேட்பாளர்கள்கூட புகாரளித்துள்ளனர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் அப்ராணியாக இருக்கிறேன். எனது வண்டியைக் கூட சோதனை செய்யுங்கள். எனது வீட்டுக்கு வேண்டுமானாலும் வந்து சோதனையிடுங்கள். நான் ஒரு சாதாரண தொண்டனாக அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். இப்போது ராஜ் சத்யனுக்காக பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.�,