Xநாடாளுமன்றத்தின் வாசல் படிக்கட்டுகளை விழுந்து வணங்கிவிட்டு தனது பணிகளை ஆரம்பித்த பிரதமர் மோடிக்கு இந்த நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனவரி 31 தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி முடிவடைகிறது.
அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் முறைப்படி வெளியிட இருக்கிறது. அதற்கான தீவிரமான பணிகளில் இந்தியத் தலைமை ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்பது கட்டங்களாக நாடு முழுதும் தேர்தல் நடத்தப்பட்டது. 2014 ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் மே 12 ஆம் தேதி வரை நீடித்தது. இதற்கான தேர்தல் அறிவிக்கையை மார்ச் 5 ஆம் தேதி வெளியிட்டது தேர்தல் ஆணையம். இம்முறையும் ஒன்பது கட்டங்களாகவோ, அதை விட அதிக கட்டங்களாகவோதான் தேர்தல் நடக்கும் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.
தமிழக ஆளும் விஐபிகளுக்கு நேற்று கிடைத்த தகவலின்படி, “பிப்ரவரி 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவு அடைந்துவிடும். அதன் பின் பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படக் கூடும். தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்பதே இப்போதைய திட்டம். தேர்வுகள் மார்ச் மாதமே முடிவு அடைந்துவிடும் நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,