“போராளி என்ற வார்த்தை கலைஞரையே சேரும்” என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டதாகக் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ( ஜூலை 26) காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கோபாலபுர இல்லத்திற்குச் சென்று விசாரித்தனர்.
பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக கோபாலபுரம் இல்லத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
தொடர்ந்து மருத்துவமனைக்கு பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். நேற்று இரவு அவரின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தற்போது அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகரும், தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், கருணாநிதி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கலைஞரையேச் சேரும். ஒரு நாள் இரவு அவர் வலுக்கட்டாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்த வார்த்தையையே அவர் கூறிக்கொண்டிருக்கிறார். என்ன ஒரு உத்வேகமான மனிதர் அவர். எப்போதும் தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் வாழ்ந்துவருகிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களையும் வித்தியாசமான கோணத்தில் எனக்கு நீங்கள் வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்குத் தலை வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
�,