நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதாக வெளியான செய்திகளுக்கு, விளக்கம் அளித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா
சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது விஜய்யுடன் நடிக்கவிருப்பவர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தயாரிக்கவுள்ள ஏஜிஎஸ் நிறுவனம் நவம்பர் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் படம் பற்றிய தகவல்களை அறிவித்தது. அன்று முதலே இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. ஆனால், நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அறிவித்தது.
இதனால், தொடர்ச்சியாக ராஷ்மிகா மந்தனாவைச் சுற்றிய வதந்திகளுக்குத் தனது [ட்விட்டர்](https://twitter.com/iamRashmika/status/1067446338063806464) பக்கத்தில் பதிலளித்திருக்கிறார். அதில், “விஜய் மற்றும் அட்லியின் அடுத்த படத்தில் நான் இருக்கிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள். இந்த முறை அது நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போலவே நானும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன். உங்களிடமிருந்து வரும் இத்தகைய ஆதரவு நெகிழச் செய்கிறது. அங்கு நிச்சயம் எனது முதல் படம் விரைவில் வரும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நன்றி” என்று பதிவிட்டுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் 63இல் விவேக், யோகிபாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இப்படம் 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.�,