~
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேர்தலின்போது 38 மக்களவை தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவு சராசரி 71.87% என்றும், 18 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு சராசரி 75.57% என்றும் தெரிவித்துள்ளார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.
இன்று (ஏப்ரல் 19) காலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. அப்போது, தமிழக மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு சராசரி 71.87% ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் அதிகபட்சமாக 80.47% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 56.41% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை சராசரி வாக்குப் பதிவு 75.57% ஆகும். அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26%, அரூர் தொகுதியில் 82.08% வாக்குப் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 64.14% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இன்று மாலையில் ஆண்கள், பெண்கள் வாக்கு செலுத்திய விவரம் துல்லியமாக அறிவிக்கப்படும் என்று கூறினார். இன்று காலை 11 மணியளவில் தேர்தல் அலுவலரின் டயரி கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் சரி பார்க்கப்படும் என்றும், அப்போது வாக்குப் பதிவு பற்றிய துல்லிய விவரங்கள் கிடைக்குமென்றும், மண்டல அலுவலர்களிடம் இருந்து அந்த விவரங்கள் பெறப்பட்டு மாலையில் அறிவிக்கப்படுமென்றும் கூறினார் சத்யபிரதா சாஹூ. இந்த தகவல்களினால் புள்ளிவிவரங்களில் சிறிதளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.�,