ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படாததை கண்டித்து வரும் 13 ஆம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் அரசின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் என்றும், திமுக-வின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அவர்கள் தொகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டு முறையான அறிக்கையை எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் என்னிடம் வழங்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.
இந்த நிலை தொடரும் என்று சொன்னால், ஒரு வார காலத்திற்குள் இந்த அரசு இதனை சரிசெய்யவில்லை என்று சொன்னால் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்னால் திமுக அறப்போராட்டத்தை நடத்தும் என்பதை இந்த அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன் என நான் 5 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்ததைத் தொடர்ந்து, இத்தகு மக்கள் விரோதப் போக்கினை கடைப்பிடித்து வரும் பினாமி” அதிமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு 13–ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.�,”