கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது என்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பி.வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அதிவேக ஈனுலை அதன் 40 மெகாவாட் மின் உற்பத்தி நிலையை கடந்த 7ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு எட்டியது. 1985ஆம் ஆண்டு 10.5 மெகாவாட் என்ற குறைந்த அளவு மின் உற்பத்தியில் தொடங்கப்பட்ட இந்த அணு உலை, கலவையான கார்பைடு எரிபொருளைப் பயன்படுத்தி படிப்படியாக 2018ஆம் ஆண்டு 32 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.
இதை மேலும் அதிகரிக்கும் வகையில், பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெற்று உற்பத்தி அளவு 40 மெகாவாட்டாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அதிவேக ஈனுலை தற்போது இலக்கை எட்டி சிறப்பான வரலாற்றைப் படைத்துள்ளது.
இதில், தற்போது பணிபுரிகின்ற மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலரின் பங்களிப்பு உள்ளது. இந்திய அணு மின்சாரக் கழகம், மத்திய அரசின் அணுசக்தித் துறை இந்திய மின்னணுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு பெரிதும் உதவி செய்துள்ளன” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.