2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் வாரத்திற்கு 32 இளம்பெண்கள் காணாமல் போனதாக அம்மாநில குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
உமேஷ் குமார் குப்தா என்ற பெண்கள் நல ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, உத்தரப் பிரதேச மாநிலக் குற்றப் பதிவு ஆணையம் பதிலளித்துள்ளது. அதில், 2017ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 1,675 இளம்பெண்கள் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் வாரத்திற்குச் சராசரியாக 32 இளம்பெண்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 435 இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர். அது மட்டுமில்லாமல், பல குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகமாக உள்ளது என்றும், அதற்கு மாறாகக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மிகக் குறைவாக உள்ளன என்றும் பெண்கள் நல ஆர்வலர் உமேஷ் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.
இது பற்றிப் பேசிய குழந்தை நல ஆர்வலர் ஷாசி சிங், இன்னும் பல மாவட்டங்களில் வேலைகளைச் செய்வதற்காகக் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார். “இந்த மாதிரியான விஷயங்களில் போலீஸார் சரியாக விசாரணை நடத்த வேண்டும். குழந்தைகள் அதிகமாகக் காணாமல் போகும் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,