நடப்பு கல்வியாண்டு முதல் 5 , 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் எனத் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வுக்கான கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன. குறிப்பாக மாணவர்களுக்குத் தேர்வு மையங்கள் ஒதுக்குவது தொடர்பான குழப்பம் இருந்து வந்தது. மாணவர்களுக்கு மாற்றுத் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பொதுத் தேர்வு கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009-ன்படி , 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க வேண்டும் என்பதால் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி , மாநகராட்சி , அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். அதுபோன்று தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. எனினும் தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் 100 ரூபாயும், 8ஆம் வகுப்பு மாணவர்கள் 200 ரூபாயும் தேர்வு கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,