கடலூரில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பைபர் படகுகள் மூலம் மட்டும் மீன்பிடித்துவருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இதனால் அந்த இரு மீனவ கிராமங்களுக்கும் முன்விரோதம் இருந்துவந்த நிலையில், இன்று (மே 15) காலை தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் அரிவாள், கடப்பாறை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து சோனாங்குப்பத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் யாரும் இல்லாததால், அங்கிருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அரிவாளால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் பஞ்சநாதன்(65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாண்டியன் என்பவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு நிலவிவரும் பதற்றம் காரணமாக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எப்போதுமே இங்கு மீனவர்களிடையே மோதல் நடைபெறும்.தேவனாம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் இங்குள்ளவர்களை கண்டு அஞ்சுவார்கள். இங்கு என்ன குற்றம் நடந்தாலும் , அதை செய்தது யார் என்று யாரும் தெரிவிக்கமாட்டார்கள்.�,