மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிக்கும் பரியேறும் பெருமாள் படத்தின் பாடல் இன்று ( மார்ச் 4) வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் முதன்முறையாக இயக்கும் படம் பரியேறும் பெருமாள். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் ஆனந்த விகடனில் வெளிவந்த மறக்கவே நினைக்கிறேன் தொடர் மூலமாகவும் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் மாரி செல்வராஜ். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இவர் அந்த பகுதியை கதைக்களமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரிக்கிறார். சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவனாக கதிரும் சக மாணவியாக ஆனந்தியும் நடித்துள்ளனர். ஆண்டவன் கட்டளை படத்திற்கு பின் யோகிபாபு இதில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
விவேக், மாரி செல்வராஜ் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். “உலகெங்கும் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது தெரியாமலே மரித்து மண்ணாய்ப் போகும் பிஞ்சு உயிர்களுக்காக இப்பாடல் சமர்ப்பணம்” என்ற வரிகளோடே பாடல் தொடங்குகிறது. ஏற்கனவே வெளியாகியிருந்த போஸ்டரில் கருப்பு நாயின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. சாதிப் பிரச்சினைக்காக கொல்லப்பட்ட கருப்பி என்ற நாயை நினைத்து பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.
*உன்னை கொல்லும்போது*
*அவன் சிரிச்சானா*
*நீ குரைக்கும்போது*
*அவன் முறைச்சானா*
*கருப்பி என் கருப்பி”* என்ற வரிகளும்
*“எல்லா மனுஷனும் இங்க ஒன்னு இல்ல”* என்ற வரியும் அதை உறக்கச் சொல்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும், குரலும் அதற்கு வலு சேர்க்கிறது. இடையில் ஒலிக்கும் ஒப்பாரி பாடல் சோகத்தையும் வேகத்தையும் கூட்டுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கருப்பி பாடல் ஏற்படுத்தியுள்ளது.
[கருப்பி பாடல்](https://www.youtube.com/watch?v=wdjgjSN9MIE)�,”