‘வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, குஜராத்தில் காதலர்களுக்குப் பூக்களும் ரோஜாவும் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்’ என்று இளம் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் காதலர் தினம் வரும்போதெல்லாம் காதலர்களை எதிர்க்கும்விதத்தில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அன்றைய தினத்தில் நாய்களுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வருடந்தோறும் காதலர் தினத்தில் ஜோடியாகச் செல்லும் காதலர்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
இந்த நிலையில் சென்னை அடையாறிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு நேற்று முன்தினம் (ஜனவரி 14) ஜிக்னேஷ் மேவானி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜிக்னேஷ், “தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி என்பது பெரியார் வழியின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பிப்ரவரி 14 காதலர் தினம் பற்றியும் பேசிய ஜிக்னேஷ், சங்பரிவார் சக்திகள் சென்ற ஆண்டு குஜராத்தில் பூங்காக்களில் அமர்ந்து பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்த இளம் காதலர்களைத் தாக்கினார்கள். ஆனால், இந்த முறை நாங்கள் ஒரு திட்டம் போட்டுள்ளோம். அதாவது பூங்காக்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இளம் காதலர்களுக்குப் பூக்களையும் ரோஜாக்களையும் கொடுப்பதாக உள்ளோம்” என்றார்.
“எங்கள் வட்காம் தொகுதியில், சாதிகளைத் தாண்டி, மதங்களைத் தாண்டி இளம் காதலர்களின் திருமணங்களை நடத்துவோம்” என்றும் குறிப்பிட்டார். குஜராத்தில் வாழும் மக்களில் ஒரு விழுக்காடு உள்ள பனியா வகுப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் அமித் ஷா, தனது சமுகத்தைச் சேர்ந்த விஜய் ரூபானியை, இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கி உள்ளார். அவர் காதலர் தினத்தில் ஜிக்னேஷின் திட்டத்தை அனுமதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.�,”