�சிபிசிஐடி காவலில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 22) மாலை பேராசிரியை நிர்மலா தேவிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளிடம் தவறான வழியில் செல்ல ஆசை வார்த்தை காட்டிய பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஏப்ரல் 20 அன்று நிர்மலா தேவியைச் சந்தித்துவிட்டு வந்த அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், “தனக்கு நிறைய மிரட்டல் வரத் தொடங்கியதாகவும், சிறைக்குள் தன்னை சுற்றி ஏதோ நடக்கிறது என்றும் சிறையில் இருந்து நான் உயிரோடு வெளியே வருவேனா என்பது கூட தெரியவில்லை எனவும் நிர்மலாதேவி கவலைப்பட்டார்” என்று தெரிவித்தார். அப்படித் தெரிவித்தவர் அன்றே இவ்வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் நிர்மலா தேவியை ஐந்து நாள்கள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசாரித்து வருகின்றனர். வருகிற 25ஆம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்தனர்.
இதனையடுத்து அருப்புக்கோட்டையில் வைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஆகியவை குறித்து பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.�,