சர்வதேச அளவில் சக்திவாய்ந்த அமைப்பாகத் திகழும் உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் பொருளாதார உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அவ்வமைப்பின் 50ஆம் ஆண்டு மாநாடு சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள டவோஸ் நகரில் இன்று (ஜனவரி 21) முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் அரசியல், வணிகம், கல்வி மற்றும் சர்வதேச அமைப்புகளில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த தலைவர்கள் உட்பட 3,000 பேர் பங்கேற்கவுள்ளனர். 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 600க்கும் மேற்பட்டோர் பேசவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனா குடியரசின் துணைத் தலைவர் ஹான் செங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவிலிருந்து ஈஷா அறக்கட்டளைத் தலைவர் சத்குரு ஜகி வாசுதேவ், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் சத்குரு ஐநா சுற்றுச்சூழல் திட்டம் , ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சார்பில், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 100 கோடி மரங்கள் நடும் புதிய முன்னெடுப்பு குறித்து பேசவுள்ளார். இதனிடையே நடிகை தீபிகா படுகோனே இந்நிகழ்ச்சியில், ”மனநலம் மற்றும் ஆரோக்கியம்” பற்றிய விழிப்புணர்வு குறித்து இன்று பேசினார்.
அவர் ,“மனிதனின் வாழ்வில் என்றைக்கும் தனிமை என்பது ஒரு தீர்வாகாது. வாழ்வில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். அதே நிலையில் நமது பலம் என்பது மிகவும் இன்றியமையாதது. வாழ்க்கையில் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை நீக்கிவிடுங்கள். மன அழுத்தம் என்பது மனிதனை எதையும் சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு கொடிய நோய். 2014 ஆம் ஆண்டு நானும் மன அழுத்தத்தை அனுபவித்து இருக்கிறேன். அப்போது தான் அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து யோசித்தேன். ஏனெனில் மன அழுத்தம் நம்மை யோசிக்க விடாது. இதனை நான் வாழ்வில் பல்வேறு தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். இதன் காரணமாகத்தான் அக்டோபர் 10, 2015 அன்று உலக மனநல தினத்தின் போது தி லைவ் லவ் லாவ் (The live love laugh foundation) என்ற அமைப்பினை உருவாக்கி என்னால் முடிந்த வரை பலரையும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவி செய்து வருகிறேன். நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது அதனை நம்முடைய தன்னம்பிக்கையைக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர முயல வேண்டும்” என்றார்.
” மன அழுத்தத்தினால் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உடல்நலக்குறைவு மற்றும் இயலாமைக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. இதிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பதையே நான் தி லைவ் லவ் லாவ் அமைப்பின் மூலம் செய்து வருகிறேன்” என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்நிகழ்வில் கலாச்சார விதிகளை வடிவமைக்கும் தலைமைக்காக ஜின் ஜிங் (ஊடக நிபுணர், நடன இயக்குநர்- சீனா), நிலையான சமூகத்தினை வடிவமைக்கும் தலைமைக்காக தியேஸ்டர் கேட்ஸ் (ஆர்டிஸ்ட்- சிகாகோ), மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலைமைத்துவத்திற்காக தீபிகா படுகோனே ஆகியோருக்கு 26 ஆவது கிரிஸ்ட்ல் அவார்ட்ஸ் 2020 வழங்கி கவுரவிக்கப்பட்டது.
�,”