ஆப்பம் பிடிக்காதவர்களே இருக்க மாட்டங்க… வயிற்றுப்புண் மற்றும் வாய் புண்ணுக்குச் சிறந்த உணவான ஆப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சீக்கிரம் ஜீரணம் ஆகக்கூடிய உணவும்கூட.
**தேவையான பொருட்கள்**
பச்சரிசி – இரண்டு டம்ளர்
உளுந்து – 3 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சாதம் – 1 கப்
சோடா உப்பு – சிறிதளவு
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
**செய்முறை**
அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்குத் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும். முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுடுவதற்குச் சரியாக இருக்கும்.
குறைந்தது 14 மணி நேரம் மூடி வைக்கவும். மாவு ஒன்றரை அல்லது இரண்டு அங்குலம் அளவு பொங்கி, கலக்கிப் பார்த்தால் லேசாக இருக்கும். நன்கு கலந்து தோசை மாவைவிடக் கொஞ்சம் இளகியதாகக் கரைத்துக்கொள்ளவும்.
ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு மாவை ஊற்றவும். ஆப்பச் சட்டியின் கைப்பிடியைப் பிடித்து மாவு வட்டமாகப் பரவுமாறு திருப்பி விடவும். பிறகு மூடி போடவும்.
சுற்றி லேசாகச் சிவந்து ஆப்பம் வெந்து வரும். அந்த அப்பத்தின் விளிம்பில் கரண்டியை மென்மையாகச் செலுத்தினால் ஆப்பம் சூப்பராகச் சட்டியில் இருந்து எழும்பி வரும். நடுவில் ஸ்பாஞ்சாகச் சுற்றி, விளிம்புகளில் முறுகலான ஆப்பம் தயார். அப்படியே எடுத்துச் சூடாகப் பரிமாறலாம்.
**குறிப்பு**
இதற்கு தேங்காய்ப் பால் மிகவும் பொருத்தமான சைடிஷ். காரம் விரும்புவோர் தேங்காய்ச் சட்னி, வெஜிடபிள் ஸ்டூ உடன் சாப்பிடலாம்.�,