ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக லைக்கா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ராஜு மகாலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது கட்டமாக ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றம், மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டு, மன்றத்திற்காக உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வேலூர், தூத்துக்குடி என ஒவ்வொரு மாவட்டத்திலும் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை நடைபெற்று, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ரஜினி மக்கள் மன்றத்தில் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் லைக்கா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ராஜு மகாலிங்கத்தின் பெயருக்குக் கீழ் ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது..
ராஜு மகாலிங்கம் 2.0 படத்தைத் தயாரித்துள்ள லைக்கா இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்துவந்தார். [சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த அவர்](https://minnambalam.com/k/2018/01/04/33), ரஜினியுடன் இணைந்து செயல்பட்டுவருகிறார். இவர்தான் ஒவ்வொரு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவருகிறார். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய தலைமைக்குப் பரிந்துரை செய்தும்வருகிறார். தற்போது ராஜு மகாலிங்கம் மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இன்று காலை சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரைச் சந்தித்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், மன்றப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது வழக்கமான ஒரு சந்திப்புதான் என்றார். “ரஜினிகாந்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நான் ஒன்றும் தெரிவிக்க இயலாது, அதனை அவர்தான் தெரிவிப்பார் என்று கூறினார்.
கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி முதல் நாளை நமதே சுற்றுப்பயணம் மேற்கொள்ளார். ரஜினிகாந்த் ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான பணிகளையும் ராஜூ மகாலிங்கம்தான் செய்து வருகிறார்.
�,”