ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 11ஆம் நாளான நேற்று இந்தியா தனது 11ஆவது தங்கத்தை வென்று அசத்தியுள்ளது.
தடகளப் போட்டியில் ட்ரிபில் ஜம்ப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் அப்ரிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் அப்ரிந்தர் சிங் தனது மூன்றாவது முயற்சியின்போது 16.77 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் தற்போது இந்தியா, 48 ஆண்டுகள் கழித்து இந்தப் பிரிவில் தங்கத்தை வென்றுள்ளது.
முன்னதாக 1970ஆம் ஆண்டு மோஹிந்தர் சிங் கில் 16.11 மீட்டர் உயரம் தாண்டி, தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது.
பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா 6026 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய போட்டி வரலாற்றில் இந்தப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இந்தப் பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை பூர்ணிமா ஹெம்பரம் 5837 புள்ளிகளுடன் நான்காம் இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
நேற்று கிடைத்துள்ள 2 தங்கப் பதக்கங்கள் உட்பட தடகளத்தில் மட்டும் இந்தியா இதுவரை 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டு கால வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருக்கும் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இந்தியா இந்த பெருமையைப் பெற்றிருக்கிறது.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் டுட்டி சந்த் 23.20 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். பஹ்ரைனைச் சேர்ந்த ஓடியாங் எடிடாங் 22.96 விநாடிகளில் இலக்கை கடந்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
இது இந்தத் தொடரில் டுட்டி சந்த் கைப்பற்றும் இரண்டாவது பதக்கமாகும். முன்னதாக 100 மீட்டர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
ஆசிய போட்டிகளில் 4 x 400 மீட்டர் தடகளத்தின் ரிலே பிரிவில் இந்தியா சார்பில் முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ், ஹீமா தாஸ், பூவம்மா ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தனர். இந்தப் போட்டியில் முதலிடத்தை படித்த பஹ்ரைன் வீராங்கனை, கோலை மூன்றாவது முறையாக மாற்றும்போது இந்திய ஓடுதளத்தில் விழுந்தார். இது ஹிமா தாஸின் வேகத்துக்கு பின்னடைவாக அமைந்ததாக இந்திய தடகள சம்மேளனம் புகார் ஒன்றை அளித்திருந்தது.
நேற்று காலை நடைபெற்ற இந்த விசாரணையில் இந்தியாவின் புகாரை, jury of appeals எனப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் அந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியா மீண்டும் மேல் முறையீடு செய்தது. நேற்று மாலை நடைபெற்ற அந்த விசாரணையிலும் இந்தியாவுக்குச் சாதகமாக தீர்ப்பு வராததால், பரிசளிப்பு விழாவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.�,”