அனிதாவுக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் புதுச்சேரியில் 5 ஆயிரம் மாணவர்கள் இன்று (செப்டம்பர் 4) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் தாகூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, தவளக்குப்பம், வில்லியனூர் அரசு கல்லூரிகள், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்லூரியிலிருந்து ஊர்வலமாகப் புதுச்சேரிக்கு வந்தனர். இதையடுத்து, நகரின் மையப்பகுதிக்கு வந்த மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் நேரு வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். ஏற்கனவே மாணவர்கள் போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகளை ஏற்படுத்திப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், மாணவர்களை ஆளுநர் மாளிகைக்குள் செல்வதைத் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தபால் நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலியைத் தாண்டி ஆளுநர் மாளிகைக்குள் மாணவர்கள் செல்ல முயன்றனர். ஆனால்,போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கேயே அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். திமுக மாணவர் அணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சட்டசபை, தபால் நிலையம், டெலிபோன் நிலையம் போன்றவற்றுக்கு மக்களால் செல்ல முடியவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதுபோன்று, மாணவர்கள் அனிதாவுக்காக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
�,