,
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்க மறுக்கப்பட்டதால், ஓடும் ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் ஏற்பட்டு பிறந்த குழந்தை உயிரிழந்தது பெங்களூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் (ஜூலை 20) இரவு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு படுக்கை வசதி இல்லை என்று கூறி கர்ப்பிணியை அனுமதிக்கவில்லை.
பின்னர் விக்டோரியா, ஸ்ரீராமபுரா அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றும் அங்கு அவரை அனுமதிக்கவில்லை. அதன்பிறகு, இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் கர்ப்பிணியை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கும் படுக்கை வசதி இல்லை என்று கூறி கர்ப்பிணியை அனுமதித்து சிகிச்சை அளிக்கவில்லை.
இந்த நிலையில், அடுத்த மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஓடும் ஆட்டோவிலேயே அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக தாயையும் குழந்தையையும் மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது.
“சரியான நேரத்தில் கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காத காரணத்தால் குழந்தை இறந்து விட்டது” அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
**-ராஜ்**�,