என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும்; அதனால் எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துப் பிரபலமானவர் சாய் பல்லவி. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. தற்போது இவர் இயக்குநர் விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் ‘கரு’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்துக்கும், தனுஷ் ஜோடியாக மாரி இரண்டாம் பாகம் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கில் அவர் நடித்த ‘ஃபிடா’ படமும் வெற்றி பெற்றது. இதில் சாய் பல்லவியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடித்துள்ளார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் சாய் பல்லவி மரியாதை குறைவாக நடந்துகொண்டார், அவரது செயல்கள் தன்னை எரிச்சலடையவைத்ததாக நடிகர் நாக சவுரியா புகார் கூறியிருந்தார். இதற்கு சாய் பல்லவி மறுப்பு தெரிவித்திருந்தார். பட வாய்ப்பை மறுப்பது, சம்பள உயர்வு என இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட சாய் பல்லவியிடம், குறிப்பிட்ட சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடிப்பது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், “எந்த நடிகையையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்ளவதில் எனக்கு உடன்பாடில்லை. அதே போல் எல்லா கதாபாத்திரத்திற்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று கூறமுடியாது. எனவே, எனது எல்லைக்குள் நின்று நடித்துவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,