தண்டவாளத்தில் படுத்து உறங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் வருமானத்திற்கு வழியின்றி ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு மைல்கள் வரை நடந்தே சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். நெடு தூரம் நடந்தே சென்றதால் சிலர் உயிரிழந்தனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்புதான் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில் வசதி செய்துத் தரப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில்தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்திலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான மத்திய பிரதேசம் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். ரயில் தண்டவாளம் வழியாகவே சென்ற அவர்கள், கர்மத் பகுதியில் நேற்றிரவு ஓய்வெடுக்க முடிவு செய்தனர். ரயில் சேவை தடைபட்டுள்ளதால் ரயில் வராது என்ற எண்ணத்தில் அங்குள்ள தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (மே 8) அதிகாலை அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் அவுரங்காபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து இன்று காலை 5.15 மணிக்கு நடந்துள்ளது.
இதுபற்றி ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று அதிகாலை ரயில் பாதையில் சில தொழிலாளர்களைப் பார்த்த சரக்கு ரயிலின் லோகோ பைலட் ரயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் அவர்கள் மீது ரயில் மோதிவிட்டது. காயமடைந்தவர்கள் அவுரங்காபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசினேன். நிலைமையை அவர் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
**எழில்**
�,”