வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்படவிருக்கும் நிலையில், அதற்குத் தயாராகும் வகையில் சுமார் 4,000 விநியோகஸ்தர்களுக்கு ஜி.எஸ்.டி. தொடர்பான பயிற்சிகளை வழங்கும் பணியில் ஹிந்துஸ்தான் கோக கோலா குளிர்பான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் நிறுவனமான ஹிந்துஸ்தான் கோக கோலா இந்தியாவின் மிகப்பெரிய குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இதற்கு இந்தியாவில் மட்டும் 24 ஆலைகள் உள்ளன. இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தனது விநியோகஸ்தர்களுக்கு ஜி.எஸ்.டி. தொடர்பாக பயிற்சியளிக்கும் பணியில் ஹிந்துஸ்தான் கோக கோலா நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது நிறுவனத்தின் 100 பயிற்சியாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள எங்களின் 4,000 விநியோகஸ்தர்களுக்கு ஜி.எஸ்.டி. தொடர்பான அனைத்துப் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, குளிர்பான பிரிவுகளுக்கான ஜி.எஸ்.டி. விகிதம், அதன் அமைப்பு, ஜி.எஸ்.டி. விதிமுறை உள்ளிட்ட பல பிரிவுகளில் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எங்களின் வர்த்தக பங்குதாரர்களுக்கு ஏற்கெனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி முகாமில் விநியோகஸ்தர்களுக்கு அவரவர் உள்ளூர் மொழிகளிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. (ஜூன்) 29ஆம் தேதிக்குள் பயிற்சிகள் வழங்கப்பட்டு விடும். மேலும், ஜி.எஸ்.டி தொடர்பான விளக்கங்களையும், சந்தேகங்களையும் விநியோகஸ்தர்களுக்கு தெளிவுபடுத்த நிறுவனத்தின் சார்பில் ஜி.எஸ்.டி. ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,