மாயமான விமானம் கண்டுபிடிப்பு: மீட்பு பணிகள் நிறுத்தம்

public

நேற்று நேபாளத்தில் மாயமான தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. தேடல் மற்றும் மீட்புப் படையினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்துள்ளனர் ஆனால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து மீட்பு பணியை தொடர முடியவில்லை.

நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் நிறுவனத்தின் இரட்டை எஞ்சின் விமானம் நேற்று காலை நேபாளில் காணாமல் போன சில மணி நேரங்களுக்கு பிறகு முஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விபத்துக்குள்ளானது. கிளம்பிய 15 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்ததால், இந்த விமானம் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் பயணிகளின் நிலை குறித்தும், விபத்துக்கான காரணத்தை குறித்தும் இன்னும் தகவல்கள் எதுவும் இல்லை.

நேபாள ராணுவத்திற்கு, உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் படி, தாரா ஏர் விமானம் மணபதி ஹிமாலின் நிலச்சரிவின் கீழ், லாம்சே ஆற்றின் முகத்துவாரத்தில் விழுந்து நொறுங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேபாளம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பொது மேலாளர் பிரேம்நாத் தாக்கூர் கூறுகையில், “விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பனிப்பொழிவு காரணமாக, இன்று தேடுதல் மற்றும் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்ட அனைத்து ஹெலிகாப்டர்களும் தளங்களுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு படையை சம்பவ இடத்திற்கு அனுப்ப வேறு வழிகள் எதாவது உள்ளதா என்று விவாதித்து வருகிறோம்.” என்று கூறினார்.

இந்நிலையில், நேபாள ராணுவம் ஹெலிகாப்டர் தேடுதலுக்கு தயாராகி வருகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதீந்திர மணி போகரேல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *