சீனாவில் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்தது. கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது. ஆகையால் வணிக நகரமான ஷாங்கையில் தொழிற்சாலைகள் உட்பட அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்பட்டன. இதனால் சீனாவில் சில்லறை விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
அதேபோல் பெய்ஜிங்கிலும் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தேசிய புள்ளியியல் விவரங்கள், ஏப்ரல் மாதத்தில் சில்லறை விற்பனை ஆண்டுக்கு 11.1 சதவீதம் வீழ்ச்சியடைந்தது என்பதைக் குறிப்பிடுகின்றது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும் ஆண்டுக்கு 2.9 சதவீதம் சரிந்துள்ளது, கடந்த மாதம் கோவிட் கட்டுப்பாடுகளால் மூடப்பட்ட தொழிற்சாலைகளால் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 5.0 சதவீத வளர்ச்சியிலிருந்து தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டின் வேலையின்மை தொடக்கத்திலிருந்தே உயர்ந்து காணப்பட்டது, மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.1 சதவீதத்தை எட்டியது. மேலும் இந்த ஆண்டு புதிய பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் வேலைச்சந்தையில் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம், அரசு நிறுவனங்களிலும், சிறிய நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதிக பட்டதாரிகள் வேலை தேடும் போது, அதை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணியிடங்கள் இல்லை என்றால் அது பொருளாதார குறியீட்டில் வெகுவாக பாதிக்கும்.
கடுமையான ஊரடங்கிலிருந்து தளர்வுகள் மெல்ல மெல்ல அறிவிக்கப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் எப்போது தளர்வுகள் அமல்படுத்தப்படும், எத்தனை நாட்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
.