திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் உச்சி மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வரும் மக்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகளை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்னின்று செய்துள்ளனர்.
கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு உச்சி காளியம்மன் கோவில் அடைக்கப்பட்டதால் ஒரு சமுதாய மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்ய சென்ற ஒரு தரப்பு மக்களுக்காக கோயில் திறக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் செலவு செய்து கட்டிய கோயிலில் மாற்று சமூகத்தினரை அனுமதிக்கமாட்டோம் என்று கோவிலை நிர்வகித்து வருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சித்தரேவு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து தரப்பினரையும் உச்சி காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பழனி உடுமலை சாலையில் இன்று மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கோவிலுக்குள் அனுமதிக்க கோரி ஒரு தரப்பினரும், உள்ளே விடமாட்டோம் என மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
.