தமிழகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிகளவு விபத்துக்கள் நடைபெறுகின்றன. கடந்த 2018ஆண்டில் 63,920 விபத்துகளும், 2019 ஆண்டில் 57,228 விபத்துகளும், 2020 ஆண்டில் 45,484 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் எதிரே வந்த லாரியுடன் மோதியதில் வேன் ஓட்டுநர், மூன்று பெண்கள் என நால்வர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி தனியார் காலணி தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சென்னை-பெங்களூர் சாலைக்கு மாறியது. அந்த நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் ஓட்டுநர், 3 பெண் தொழிலாளர்கள் என நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
**-வினிதா**