பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை பிப்ரவரி மாத இறுதியில்தான் சரியாகும் என ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் 8ஆவது சர்வதேச மாநாடு நடந்து வருகிறது. அதில் பங்கேற்ற ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பணமதிப்பிழப்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், “பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின், நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு உருவாகி இருக்கிறது. பணப்புழக்கம் குறைந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளது. அந்தச் சூழல் பிப்ரவரி இறுதியில் சரியாகி விடும் என நம்புகிறேன்.
பிப்ரவரி மாதத்துக்குப் பின், வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து பணத்தை பெற வேண்டிய அவசியம் இருக்காது . அனைத்து வங்கிகளுக்கும் போதுமான அளவில் பணம் விநியோகிக்கப்படும். மக்கள் தேவைகேற்றவாறு பணத்தை ஏடிஎம் மற்றும் வங்கிகளில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மாநாட்டில், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தாலும், அதையே முழுவதும் நம்பாமல், டிஜிட்டல் பரிமாற்றத்தை நோக்கி நகர வேண்டும். இல்லையெனில், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் இந்தமுயற்சிகள் அர்த்தமில்லால் போய்விடும்.எனவே, மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், ஜனவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் பணப் பிரச்னை சீராகும் என அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
�,