Oசீனாவில் மீண்டும் கொரோனா பலி!

public

சீனாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு, தற்போது முதல் முறையாக கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகில் முதன்முறையாக கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பல உருமாற்றம் அடைந்து, கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று பரவி மக்களை பாதித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மூன்றாவது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, உலக நாடுகளிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் முன்னர் கடைபிடிக்கப்பட்ட ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ அடிப்படையில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள இடங்களை தீவிரமாக கண்காணித்து, அங்கிருந்து வேறு இடங்களுக்கு தொற்று பரவாத வகையில் தடுப்பதன் மூலம், முடிந்த அளவு விரைவில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை ஆணையத்தின் இணை அமைச்சர் வான் ஹென்செங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் , சீனாவில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது இருவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். சீனாவின் ஜிலின் மாகாணத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,638 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமையன்று சமூகப் பரவல் மூலம் 2,157 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவை ஜிலின் மாகாணத்தில் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *