நிலம் அபகரிப்பு: அரை நிர்வாணக் கோலத்தில் அண்ணன் – தம்பி

public

தங்களது நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க அரை நிர்வாணத்தில் வந்த அண்ணன்- தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனியப்பன் (வயது 70), வரதராஜன், (68). இருவரும் அண்ணன் – தம்பி. இவர்கள் தனது தந்தை தீர்த்தாராமன் என்பவரின் பெயரில் உள்ள நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்காக வில்லங்கச் சான்று பெற்றனர்.
அதில் 13 சென்ட் நிலத்தில் 6.5 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவரது பெயரில் போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அண்ணன் – தம்பி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அண்ணன்- தம்பி இருவரும் நேற்று மதியம் 1 மணி அளவில் அரை நிர்வாண கோலத்தில் போச்சம்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது நெற்றியில் பட்டையும், உடலில் நாமம் போட்டுக்கொண்டு கையில் தட்டை ஏந்திக்கொண்டு யாசகம் கேட்பது போல் வந்து சார்பதிவு அலுவலர் ஷர்மிளாவிடம் மனு கொடுத்தனர். அவர், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள போச்சம்பள்ளி சார்பதிவு அலுவலர் ஷர்மிளா, “நான் விடுப்பில் உள்ள போது, பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *