தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கொலைகள் திருப்பூர் மாநகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 7ஆம் தேதி திருப்பூர் தாராபுரம் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் சூட்கேசில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. அப்பெண் அசாமை சேர்ந்த நேகா என்பதும், குடும்ப தகராறில் அவரை அவரது கணவரே கொலை செய்து, சூட்கேசில் அடைத்து கழிவுநீர் கால்வாயில் கடந்த 6ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வீசியதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், மறுவாரத்தில் கடந்த 14ஆம் தேதி காலை திருப்பூர் கருக்காதோட்டம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சதீஷ் என்பவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 13ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கும்பலாக சேர்ந்து மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில், மற்றவர்கள் சேர்ந்து சதீஷை கொன்று தலையை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கொலைகளால் திருப்பூர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், மூன்றாவது ஞாயிற்றுகிழமையிலும் ஒரு கொலை நடந்திருப்பது மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த நிலையில்,இன்று காலையில் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் விநாயகர் கோயில் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கொலையும் ஞாயிற்றுக்கிழமை(பிப்ரவரி 20) இரவுதான் நடந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பதும், பெயிண்ட்டிங் வேலை செய்து வந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. சடலம் மீட்டெடுக்கப்பட்ட இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் கொலைகளினால் அச்சமடைந்துள்ள திருப்பூர் மக்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-வினிதா**