|புயல்: 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்!

public

நிவர் புயல் காரணமாக நாளை முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து சேவை நிறுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் வரும் நவம்பர் 25 ஆம் தேதி மாமல்லபுரம் , காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் எடப்பாடி, இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி ,நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் நவம்பர் 23ஆம் தேதியன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருள், ஜேசிபி, லாரி, மரம் அறுக்கும் மின்சார இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உண்டாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

“புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள அவர், பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்கச் சமையலர்கள், பொதுமக்களுக்குத் தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேவும் ,மாவட்டங்களுக்கு உள்ளும் **நவம்பர் 24ஆம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும்** கூறியுள்ளார்.

“கடலோர கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரமான கட்டுமரங்கள், மின்மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும், தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்றவும பம்பு செட்டுகளை தயார்நிலையில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக் கழிவுகளை அகற்றி தேவையான கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

பெரிய ஏரிகளில் நீர் கொள்ளளவு பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன் அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

மழைநீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகள் இன்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் தொலைத் தொடர்புக் கருவிகளை இப்போதே தயார் நிலையில் வைத்து, தொலைத்தொடர்பு சேவை பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் கூடுதலாக 1000 மின்சார பணியாளர்களையும் கூடுதல் மின் கம்பங்கள் மின் மாற்றிகள் மற்றும் மின் கடத்திகள் பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும்.

வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைத்து நிவாரண முகாம்களிலும் சானிட்டைசர்கள் முகக் கவசங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு இருப்பு வைக்கவும், சுகாதார குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்கக் காவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு மீனவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள அந்தந்த நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதோடு பொதுமக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வங்கிக் கணக்கு, புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மின்கம்பங்கள், தெருவிளக்குகள், மின்மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்ல வேண்டாம். வீடுகளில் மின் சாதன பொருட்களைக் கவனமாகக் கையாள வேண்டும். பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்பு உள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

**-பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *