முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்கினால்கூட பாதிப்பு ஏற்படாது என்று நிபுணர்கள் கூறியுள்ளதால், கேரளாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீரை தேக்கிக்கொள்ளும் உரிமை நமக்குண்டு. பேபி அணையின் நீரை பயன்படுத்திக் கொண்டு நீரின் மட்டத்தை 152 அடிவரை உயர்த்திக்கொள்ளலாம். தற்போது அணையில் தண்ணீரைக் குறைப்பது என்பது முடியாது. 142 அடி என்பது நிலைநாட்டப்பட்ட உரிமை. இதனால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. 142 அடி இருப்பதுதான் சரி” என்று கூறினார்.
முன்னதாக கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைப்பது குறித்து ஆலோசிக்க உச்ச நீதிமன்றம் அணையின் துணை கண்காணிப்பு குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு கலந்தாலோசித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பாக இரண்டு குழுவும் எடுக்கும் முடிவைத் தமிழக அரசு மதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், தமிழக – கேரள எல்லையில் உள்ள தேனி வழியாக கேரளாவுக்குச் செல்லும் குமுளி மலைச்சாலையில் ஏற்பட்ட சாலை உடைப்பைப் பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 142 அடிக்கு நீர் தேக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.�,