கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிக் கட்டணத்துக்காக வங்கியில் வாங்கிய கல்விக்கடனை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் திருப்பிச்செலுத்த முடியாமல், ஏராளமான மாணவர்கள் தவித்து வருகின்றனர். கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதற்காக, வங்கிகளும் தனியார் நிறுவனங்கள் மூலம் மாணவர்களிடம் கடனைக் கட்டச் சொல்லி வற்புறுத்துவது, வீட்டுக்கு ஆள் அனுப்புவது எனப் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கல்விக் கடன் குறித்தும், அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்றும் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
“பொதுத்துறை வங்கிகள் அளித்துள்ள தரவுகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.67,685.59 கோடியாக இருந்த கல்விக்கடன் மதிப்பு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.75,450.68 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மார்ச் 31ஆம் தேதி கணக்குப்படி 90 சதவிகிதத்துக்கும் அதிகமான கணக்குகள் நிலையாக உள்ளன” என்று கூறியுள்ளார்.
மேலும், கல்விக்கடனை வசூலிக்க மாணவர்களுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுத்து அதன் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக எந்தப் பதிவும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், கடனை விரைவாகச் செலுத்தக் கூறி மாணவர்களுக்கு வங்கிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படவில்லை. வங்கிகள் மென்மையான போக்கைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்டு கல்விக்கடனைத் தள்ளுபடி செய்வதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை. கல்விக் கடன்களுடன் தரவுகள் இணைக்கப்படுவது பாதுகாப்புக்காகத்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.�,