வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

public

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று (ஆகஸ்ட் 9) நிறைவேற்றப்பட்டது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை எல்லா வழக்குகளிலும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் எஸ்சி, எஸ்டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முகாந்திரம் இல்லையென்றால் முன் ஜாமீன் வழங்குவதில் எவ்விதத் தடையும் இல்லை என்று கடந்த மார்ச் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு செய்ய அவரைப் பணியில் நியமித்த அதிகாரியின் ஒப்புதலுக்குப் பிறகே வழக்கு பதிய முடியும். அதே சமயத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் அரசு ஊழியர் இல்லையெனில், மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஒப்புதல் அளித்த பின்னர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்து வழக்கு பதியலாம் என்று சில வழிமுறைகளை வகுத்தது.

இந்த உத்தரவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்று அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் குற்றம்சாட்டி வந்தன. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 10 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த ஜூலை 2ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், அதன் பிரிவுகளைக் கடுமையாக்கும் நோக்கிலும் மக்களவையில் திருத்த மசோதா கடந்த 6ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர்களை கைது செய்வதற்கு புலனாய்வு அதிகாரி, உயர் அதிகாரியின் ஒப்புதலை பெறத் தேவை இல்லை. அதோடு புகார் கூறப்படுபவரை உடனடியாக கைது செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.8.25 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லாட், ‘பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தலித் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காகப் பாடுபடும். அதன்படியே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தவிர எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், “மோடி அரசு தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குறை கூறி வரும் எதிர்க்கட்சிகளுக்குத் தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *