முகேஷ் அம்பானி உட்பட இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்கள், கடந்த 2016-17 நிதியாண்டில் தங்களது சொத்து மதிப்பை ரூ.1.28 லட்சம் கோடி உயர்த்தியுள்ளதாக புளூம்பெர்க் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய கோடீஸ்வரர்களிலேயே அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, கடந்த 2016-17 நிதியாண்டில் தனது சொத்து மதிப்பை 6 பில்லியன் டாலர் உயர்த்தியுள்ளார். இதன்மூலம் அவரது சொத்து மதிப்பு 28.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. எனினும், கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் தொடங்குவதற்காக அம்பானி ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளார். இந்த நிதியாண்டில் அதற்கான வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பானியைத் தொடர்ந்து, 1.5 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த லக்ஷ்மி மிட்டல் இரண்டாமிடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு தற்போது 15.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. கடந்த ஆண்டில் ஸ்டீல் விலை உயர்ந்து காணப்பட்டதால், இத்துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் லக்ஷ்மி மிட்டலின் சொத்து மதிப்பு ஒரு ஆண்டில் 10.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மருந்துத் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் திலிப் சங்வி, கடந்த நிதியாண்டில் 1.9 பில்லியன் சொத்து சேர்ந்து இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 14.8 சதவிகிதம் உயர்ந்து, தற்போது 14.7 பில்லியன் டாலர்களாக உள்ளது.
கட்டுமானத் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் பலோஞ்சி மிஸ்ட்ரி, கடந்த நிதியாண்டில் 6.3 சதவிகித உயர்வுடன், ரூ.865 மில்லியன் டாலர் சொத்து சேர்த்து, ரூ.14.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறார். அதேபோல, 15.3 சதவிகித உயர்வுடன் 1.9 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அசிம் பிரேம்ஜி ஐந்தாமிடத்திலும், 1.1 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் ஆறாமிடத்திலும், 12.2 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த சிரஸ் பூனவலா ஏழாமிடத்திலும் உள்ளனர். இந்த நிதியாண்டில் அதிகமாக சொத்து சேர்த்த கோடீஸ்வரராக கவுதம் அதானி (40.5%) உள்ளார். இவரது சொத்து மதிப்பு தற்போது 6.5 பில்லியன் டாலர்களாக உள்ளது.�,