தமிழகத்தில் 279 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் இதற்கு மத்திய அரசே காரணம் இதனால் வரும் 24-ஆம் தேதி கோவை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்னை, பனை, மற்றும் பயிர்கள் கருகி விட்டது. கரும்பு அழிந்து விட்டது. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. 279 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தான் காரணம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரியில் தண்ணீர் வந்து இருந்தால் பயிர் செழிப்பாக இருந்திருக்கும்.
2018-ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு மத்திய பாரதிய ஜனதா அரசு ஆட்சியை கைப்பற்றும் உள்நோக்கத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் அடிக்கு கீழ் தான் தண்ணீர் கிடைக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருந்தால் 26 மாவட்டங்கள் பயன் அடைந்து இருக்கும்.
பவானி ஆற்றில் தண்ணீர் வந்து அங்குள்ள மாவட்டங்களும் பயன் பெற்று இருக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம். எனவே மத்திய அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி கோவை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் எனது தலைமையில் நடக்கிறது. அன்று மதியம் 2 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முதல் ரெயில் நிலையம் வரை கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
�,”