ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் மட்டும் மாதத்துக்கு 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியன் ரெயில்வே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடு நடப்பதாக வந்த புகாரையடுத்து பயணிகள் தங்களது பயணத்தின்போது ஐ.டி. கார்டுகளை கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மாதத்துக்கு ஆறு டிக்கெட்டுக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. பயணிகளை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் சார்பில் கூறியதாவது, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் 6 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம். தட்கல் மூலம் 4 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம்.
6 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்ய விரும்புவோர் இணையதளத்தில் உள்ள ‘மை புரபைல்’ பக்கத்தில் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால்,ஓ.டி.பி.எண் அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பதிவு செய்யும்போது, ஆதார் எண் சேர்க்கப்பட்டு உறுதி செய்யப்படும்.
6 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்ய விரும்புவோர் ஐ.ஆர்.சி.டி.சி. பயனாளர் மற்றும் அந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளில் ஒருவரும் கட்டாயம் ஆதார் கார்டை அப்டேட் செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.�,