புதிய கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசிடம் கடந்த மே 31ஆம் தேதி சமர்ப்பித்தது. ஆனால், புதிய தேசியக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவது உள்ளிட்ட பல அம்சங்களுக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து கூறுவதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வரைவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் தரும் பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சார்பில் ஏராளமான பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட குழுவை திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்தார். அதில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோரும் கல்வியாளர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழு கடந்த 26ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை நேற்று (ஜூலை 29) சந்தித்த திமுக மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள், புதிய கல்விக் கொள்கை தொடர்பான திமுகவின் அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர். அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலினின் கடிதத்தையும் அளித்தனர்.
அந்தக் கடிதத்தில், “புதிய கல்விக் கொள்கையை ஆராய்வதற்காக திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழு, அதன் ஒவ்வொரு பகுதியையும் கவனமாக ஆராய்ந்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையானது நமது அரசியலமைப்புக்கு எதிரானதாகவும், கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி ஆகியவற்றுக்கு எதிராகவுமே உள்ளது. இது குழந்தைகளின் கல்வி உரிமை, மாநிலங்களின் கல்வி உரிமைகள், கல்வி ஜனநாயகம் ஆகியவற்றை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மும்மொழிக் கொள்கை, கிராமப்புற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவது, உயர் கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமைகளைக் கடுமையாக பாதிக்கும். இந்த நிலையில் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி சென்று சேர வேண்டும். எனவே புதிய தேசிய கல்விக் கொள்கை 2019ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: டெல்லியில் வைகோ: காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்?](https://minnambalam.com/k/2019/07/29/61)**
**[இளையராஜா பயணத்தில் மேலும் ஓர் அங்கீகாரம்!](https://minnambalam.com/k/2019/07/28/14)**
**[எடியூரப்பா வெற்றி; சபாநாயகர் விலகல்!](https://minnambalam.com/k/2019/07/29/39)**
**[அய்யா அழைத்தார், சென்றேன்: ராமதாஸ் முத்துவிழாவில் குரு மகன்](https://minnambalam.com/k/2019/07/28/40)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
�,”