பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கவைக்கக் கூடாது என இன்று (பிப்ரவரி 15) உத்தரவிடப்பட்டுள்ளது.
பதிவுத் துறைத் தலைவர் குமரகுருபரன் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
“சார்பதிவாளர் அலுவலகங்களில் தொழில்நுட்பத்தைக் காரணமாகக் காட்டி கால தாமதம் செய்வதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழில்நுட்பக் காரணத்தால் ஆன்லைன் பதிவை மேற்கொள்ள முடியாவிட்டால் ஆஃப்லைன் முறையில் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். மாவட்டப் பதிவாளர்கள் தினமும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட 4 சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும். முன்சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஆவணங்கள் 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உடனுக்குடன் திரும்ப வழங்கப்படுகிறதா என்றும், மக்களின் சந்தேகங்களுக்குச் சரியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா எனவும் உறுதி செய்ய வேண்டும். மக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கவைக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆன்லைன் பத்திரப் பதிவுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 13) தொடங்கிவைத்தார். அன்று ஆன்லைனில் பத்திரப் பதிவு செய்ய ஏராளமான மக்கள் முடிவு செய்தனர். ஆனால் எழுத்தர்கள் ஆவணத்தைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் திணறினர். ஆன்லைன் பதிவு செய்ய முடியாதது குறித்துச் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பதிவாளரிடமும் முறையிட்டனர். அங்கேயும் சர்வர் முடங்கியதால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் அவதிப்பட்டனர். ஆன்லைன் சர்வர் முடங்கியது தொடர்பாக சென்னைக்குப் பதிவாளர்கள் தகவல் கொடுத்தனர். அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முயன்றதால், சர்வர் முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.�,