I
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் சம்பளம் வழங்கக் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்எல்ஏவாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டது. மாநில அரசின் பரிந்துரையின்றி நியமிக்கப்பட்ட இவர்களுக்குப் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவில்லை.
இதனால், இவர்கள் மூவருக்கும் ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசின் பரிந்துரையின்றி, மத்திய அரசு நேரடியாக எம்எல்ஏக்களை நியமனம் செய்தது தவறு என முறையிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் நியமன எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வழங்க நிதித்துறைச் செயலர் கந்தவேலு, கருவூலத்திற்கு உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி அரசு கருவூல இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தனது ஒப்புதல் இன்றி நியமன எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
சம்பளம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
�,”