அண்மையில், தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் தொடர் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் எப்படி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கூறினார்கள். தங்களுடைய மோசமான அவலநிலையைக் குறித்து அரசின் கவனத்தைப் பெறுவதற்கு டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் வாயில் எலியைக் கடித்து போராட்டம் நடத்தினார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் முன்பு ஆடை கலைந்து நிர்வாணமாகப் போராடினார்கள். சிறுநீரைக் குடித்து போராட்டம் நடத்தினார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப்போனதால், ஏற்பட்ட வறட்சியால் தமிழக விவசாயிகளின் பிரச்னை அதிகரித்திருக்கிறது. கடந்த 140 ஆண்டுகால வரலாற்றில் தமிழகம் மிகக் குறைவான மழை பொழிவைப் பெற்றுள்ளது. இந்த மோசமான கடும் வறட்சி சூழலால் 250 தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். டெல்லியில் தமிழக விவசாயிகளின் இந்தப் போராட்ட நிகழ்வு தனித்து காணப்பட்டது. இருப்பினும், தமிழகம் ஒரு பேரழிவு சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில், இந்திய அரசின் நீர்வள வாரியம் மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பற்றி ஒரு புள்ளிவிவர வரைபடத்தை வெளியிட்டிருந்தது. அதில், தமிழ்நாடு கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக இருந்த நீர்த்தேக்க அளவைவிட தற்போது 81 சதவிகித அளவு மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் அதன் மொத்த நீர் இருப்பு தற்போது வெறும் 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இந்த மோசமான சூழல் மேலும் விரைவாக அதிகரிக்கும். ஏற்கெனவே, தமிழ்நாடு – கர்நாடகா இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பகிர்வில் கர்நாடகா தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது. கர்நாடகா எங்களிடம் இருக்கும் நீர் எங்களுடைய தேவைக்கே போதுமானதாக இருக்கும் என்று கூறியது. காவிரி பிரச்னையால் கடந்த ஆண்டு இரு மாநிலங்களிலும் கடையடைப்பு, வன்முறை, பொது வேலை நிறுத்தம் போன்றவைகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது நிலவும் இந்த கடும் வறட்சி சூழல் ஓர் அரசியல் கொந்தளிப்புக்கு இட்டுச்சென்றுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக எதிர்க்கட்சியான திமுக ஏப்ரல் 25ஆம் தேதி மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.
இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு மத்திய அரசு குரூரமாக மௌனம் காத்து வருகிறது. ஓர் இந்திய மாநிலத்தில் தண்ணீர் பிரச்னையை நிறுத்துவதைவிட, இந்தியாவின் நதியியிலிருந்து பங்களாதேஷுக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்யும் பிரதமர் மோடியின் செயல் முரண்பாடானதாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தண்ணீர் பிரச்னையில் உடனடியாக கவனம் செல்லுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அரசின் நீர்வள வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: scroll.in�,