வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு தமிழகத்தில் உருவாகியுள்ள மேலடுக்குச் சுழற்சி மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று (ஆகஸ்ட் 25) மாலை வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பெருமழை பெய்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம், பேரையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பெருமழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பெருமழை பெய்தது. சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதியிலும், நேற்றிரவு லேசான மழை பெய்தது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.�,