இந்திய டென்னிஸ் அணியின் நட்சத்திர இணையாகக் கருதப்படும் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் இணை இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளனர்.
ஆடவர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் புப்ளிக்-டெனிஸ் எவ்சேவ் ஜோடியை எதிர்கொண்டனர்.
52 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்று தங்கத்தை வென்றது. இதன் மூலம் இந்த இணை ஆசிய போட்டிகளில் தனது முதல் தங்கத்தைப் பதிவு செய்துள்ளது.
**தண்ணீரில் சாதித்த இந்தியர்கள்**
படகோட்டும் போட்டியில் ஆடவருக்கான quadruple sculls பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சவர்ன் சிங், டட்டு போக்கனல், ஓம் பிரசாத், சுக்மீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய குழு 6.17.13 மணி நேரத்தில் இலக்கைக் கடந்து தங்கம் வென்று அசத்தியது.
ஒற்றையர் sculls பிரிவுக்கான போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் சவுஹான் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்
**வெண்கலம் வென்ற ஹீனா**
துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஹீனா சிந்து 219.2 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
**ஊக்கமருந்து சர்ச்சையால் வெளியேறிய வீரர்**
துர்க்மேனிஸ்தானைச் சேர்ந்த 24 வயதான குத்துச்சண்டை வீரர் ருஸ்டம் நஸாரோவுக்கு கடந்த 19ஆம் தேதி சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதனை சோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டு இந்த தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். ருஸ்டம் நஸாரோ, இந்த ஆண்டில் ஊக்கமருந்து சர்ச்சையினால் தகுதியிழக்கும் முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
**பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி**
ஆடவருக்கான கைப்பந்து போட்டியின் க்ரூப் 3 ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியா பாகிஸ்தானை 28-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
�,”