முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக வலுவாகக் காய்களை நகர்த்திவருகிறார்கள். செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டு வதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி எடப்பாடி ஏற்பாடு செய்திருக்கும் பொதுக்குழுவுக்கு முன்பாக, தான் அதிரடி காட்ட வேண்டும் என்று வேறு ஒரு திட்டம் போட்டுச் செயலில் இறங்கியிருக்கிறார் டிடிவி தினகரன்.
இதுபற்றி தினகரன் அணியில் பேசியபோது, “தினகரனும் கட்சியை பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதுவரை மாவட்ட செயலாளர்களை மாற்றிவருபவர் அடுத்த கட்டமாக ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர்கள் பொறுப்புகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்கள்.
“சென்னையில் அதிமுக தலைமைக் கழகம் அருகே அமைந்துள்ள ஹேமாமாலினி திருமண மண்டபத்தில் எங்கள் அணியினர் செயற்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. செப்டம்பர் 5, அல்லது 7ஆம் தேதியில் மண்டபம் கேட்கப்பட்டிருக்கிறது. 7ஆம் தேதி ஏற்கனவே புக் செய்யப்பட்டிருப்பதால், 5 அல்லது 6ஆம் தேதி, தினகரன் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றுவார். கட்சி தொடர்பாக மட்டுமல்ல, இந்த ஆட்சி தொடர்பான முக்கிய முடிவும் எட்டப்படும்’’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், தேர்தல் ஆணையத்தில் இன்று தனது அணியினரை வைத்து முறையீடு ஒன்றை அளித்துள்ளார் தினகரன். விரைவில் தமிழக ஆளுநரைச் சந்திக்க தினகரன் தேதி கேட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரோடு ஆளுநர் மாளிகை சென்று அதுபற்றித் தெரிவித்தது தினகரன்தான். ஆளுநருக்கும் தினகரனை நன்றாகத் தெரியும். இந்த மாத இறுதிக்குள் ஆளுநரைச் சந்தித்துவிட்டு டெல்லி செல்லவும் திட்டமிட்டுள்ளார் தினகரன். அங்கே பாஜக தலைவர்களையும் சந்தித்து, நேருக்கு நேர் சில விளக்கங்களையும் அளிக்க முடிவு செய்திருக்கிறாராம் தினகரன்.
இதை அறிந்துதான் முதல்வர், துணை முதல்வர் இருவரும் சேர்ந்து டெல்லிக்குப் படையெடுத்திருக்கிறார்கள்.�,