மென்பொருள் உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கினாலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இன்னும் பின்தங்கியே இருப்பதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் தலைவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த ‘கிரியேட்4இந்தியா’ மன்றத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா பேசுகையில், “தேவைக்கு ஏற்ப மென்பொருள் வசதி, உள்கட்டமைப்பு, சேவைகள் மற்றும் மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரத்தை வழங்குதல் ஆகியன ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன. மென்பொருட்கள், செயலிகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நாம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். இருப்பினும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாம் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. முக்கியமாக ஹார்ட்வேர் சம்பந்தமான உள்கட்டமைப்புகளில் நாம் சரியாக செயலாற்றவில்லை.
இந்தியாவில் 30 கோடி பேர் இணைய சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பிராட்பேண்ட் வழியாக இணையச் சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். சர்வதேச அளவில் சராசரியாக 46 சதவிகிதம் இணையச் சேவைகள் பிராட்பேண்ட் மூலம் பயன்படுத்தப்படுகிறது. மீதம் 54 சதவிகிதம் இணையச் சேவைகள் மொபைல் மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ 7 சதவிகிதம் டேட்டா சேவைகளே பிராட்பேண்ட் மூலம் பயன்படுத்தப்படுகிறது. மீதம் 93 சதவிகிதம் டேட்டா சேவைகள் மொபைல் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பிரச்னையாக எழுந்துள்ளது. பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரித்துவிட முடியாது. எனவே மாற்று உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.�,