மாநிலங்களவையில் எம்.பிக்கள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், “நீங்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியுடையவர்கள்” என்று துணை சபாநாயகர் பி.ஜெ.குரியன் எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்குத் தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். கடந்த 21 நாள்களாக நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியுள்ளது.
நேற்றைய தினம், கூச்சல் குழப்பம் காரணமாக மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து 2.26 வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, நேற்று பிற்பகல் 2.26க்கு நாடாளுமன்ற அவை தொடங்கியது. அப்போது, ஆந்திர எம்.பிக்கள் எங்களுக்கு நீதி வேண்டும், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோஷமிட்டவாறு துணை சபாநாயகர் இருக்கை அருகே வந்தனர். இதேபோல், தமிழக எம்.பிக்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி துணை சபாநாயகர் குரியன் கேட்டுக்கொண்டார். எனினும் அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, “விதியின்படி, போராட்டம் நடத்தும் உங்களையெல்லாம் வெளியேற்றும் தீர்மானத்தை நான் கொண்டுவருவேன். அதன்படி, நீங்கள் உங்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பீர்கள்” என்று எச்சரித்த குரியன், தான் அதற்கான வழிகளை மேற்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீங்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியானவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பின்னரும் எம்.பிக்கள் கூச்சலிட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக குரியன் அறிவித்தார்.�,