�
சாதாரண பீச்சர் போன்களுக்கான சந்தையில் 15 சதவிகிதப் பங்குகளுடன் இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
2018ஆம் ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டில் சர்வதேச பீச்சர் போன்களுக்கான சந்தை 38 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பீச்சர் போன் விற்பனை மற்றும் நோக்கியா ஹெச்.எம்.டி. போன்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற காரணிகள் இந்த வளர்ச்சிக்கு உதவியுள்ளன. ஜனவரி – மார்ச் காலாண்டில் சர்வதேச அளவில் விற்பனையான மொத்த பீச்சர் போன்களில் இந்தியாவின் பங்கு மிக அதிகமாக 43 சதவிகிதமாக இருக்கிறது. இங்கு பீச்சர் போன்களுக்கான தேவையும் அவற்றின் விற்பனையும் இதர நாடுகளை விட மிக அதிகமாகவே இருந்துள்ளது.
இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ இப்பிரிவில் 15 சதவிகிதப் பங்குகளுடன் சர்வதேச அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து 14 சதவிகிதப் பங்குகளுடன் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா ஹெச்.எம்.டி. இரண்டாம் இடத்திலும், 13 சதவிகித சந்தைப் பங்குடன் ஹாங்காங்கின் ஐடெல் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. சாம்சங் மற்றும் டெக்னோ நிறுவனங்களின் சந்தைப் பங்கு தலா 5 சதவிகிதமாக இருக்கிறது. டிஜிட்டல் மாற்றத்துக்கு வாடிக்கையாளர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியாததாலும், கல்வியறிவு குறைவாக இருக்கும் வாடிக்கையாளர்களும் ஸ்மார்ட்போன்களுக்கு மாறாமல் பீச்சர் வகைப் போன்களைத் தொடர்ந்து பயன்படுத்திவருவதாக இந்த ஆய்வு விவரங்களை வெளியிட்டுள்ள கவுண்ட்டர் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.�,