செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் மணிரத்னம் தன்னை ஒரு குழந்தையைப் போல நடத்துகிறார் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துவரும் படம் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தொடர் தோல்வி, தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு என நெருக்கடியில் இருந்துவந்த சிம்புவிற்கு அவற்றிலிருந்து மீள இது முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டுள்ளார் சிம்பு. இந்த நிலையில் சமீபத்தில் ஸிப்ஃபி இணையதள பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மணி சார் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்துகிறார். நாங்கள் முடிந்த அளவுக்குக் காலையிலிருந்தே படப்பிடிப்பைத் துவக்கி முழு நேரத்தையும் பயன்படுத்திவிடுவோம். அவர் என்னைப் பற்றி அதிகம் கேட்டதிலிருந்து நான் வேறுபட்டு இருந்ததைப் பார்த்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
செக்க சிவந்த வானம் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ள காட்சிகளைப் படமாக்கவிருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.
�,”