நாட்டிலுள்ள ஏடிஎம்களில் சுமார் 85 சதவிகித ஏடிஎம்கள் முறையாகச் செயல்படுவதாகவும், வங்கிகளிலும் டெபாசிட் அதிகரித்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் பணத் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனினும், பணத் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், நோட்டுகளை அச்சிடும் பணியில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாகவும், அச்சு மைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக நோட்டுகள் அச்சிடும் பணி முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டிலுள்ள ஏடிஎம் எந்திரங்கள் தற்போது பெருமளவில் செயல்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் பேசுகையில், “ஏப்ரல் 20 நிலவரப்படி இந்தியாவில் 85 சதவிகிதம் அளவிலான ஏடிஎம்கள் முறையாக இயங்குகின்றன. மேலும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகையின் அளவும் உயர்ந்து வருகிறது. ஏப்ரல் 16ஆம் தேதியில் 60 சதவிகிதம் அளவிலான ஏடிஎம்கள் இயங்கின. அந்த அளவு 19ஆம் தேதி 82 சதவிகிதமாக இருந்தது. எனவே ஏடிஎம் நிதி நெருக்கடிப் பிரச்சினை குறைந்து, நிலைமை வெகு விரைவாகச் சீராகி வருகிறது” என்றார்.�,